அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
தக்பீருக்கு முன் ஸஃபை சரி செய்தல்:
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வளைந்த) அம்புக் குச்சிகளைச் சீராக்குவதைப் போன்று எங்கள் (தொழுகை) அணிகளைச் சீராக்குவார்கள். இதை நாங்கள் (நன்கு) புரிந்து கொண்டோம் என்று அவர்கள் கருதியவரை (இவ்வாறு செய்துவந்தார்கள்). பின்னர் ஒரு நாள் அவர்கள் வந்து (தொழுவிப்பதற்காக) நின்று தக்பீர்(தஹ்ரீம்) கூறப்போகும் நேரத்தில் ஒரு மனிதரின் நெஞ்சு வரிசையிலிருந்து (விலகி) வெளியேறியவாறு நிற்பதைக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் அடியார்களே! உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில்,அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை (பிளவை) ஏற்படுத்தி விடுவான் என்று கூறினார்கள். [ஸஹீஹ் முஸ்லிம்:745, திர்மிதி:210]
(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்துவ்தற்க்கென்றே ஒரு மனிதரை நியமித்திருந்தார்கள். வரிசைகள் சரியாக அமைந்துவிட்டன என்று தெரிவிக்கப்படாதவரை அவர்கள் தக்பீர்(தஹ்ரீம்) கூற மாட்டார்கள்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [முவத்தா மாலிக்]-
குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவது:
மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! [ஸூரத்துல் முஸ்ஸம்மில் 73:4] ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அத்தியாயத்தை (ஓதினால் வேக வேகமாக ஓதாமல்) நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள். எந்த அளவிற்கென்றால் (அவர்கள் ஓதும் சிறிய அத்தியாயம்கூட குர்ஆனிலுள்ள) நீளமான அத்தியாயங்களில் ஒன்றைப் போன்றாகிவிடும். [ஸஹீஹ் முஸ்லிம்:1336]
யஃலா இப்ன் மம்லக்(ரலி) கூறியதவாது: "நான் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் ஓதுதலை பற்றி கேட்டேன், 'அவர்கள் ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியாய் தெளிவாகத் தெரியும்படி ஓதுவார்கள்' என்று பதிலளித்தார்கள்" [நபிகள் நாயகம்- நேர்முக வர்ணணை:313, திர்மிதி:3177, அபுதாவூத், நஸயீ, தஃப்ஸீத் இப்ன் கதீர்,ஸூரத்துல் முஸ்ஸம்மில் 73:4] -
சூரா ஃபாத்திஹா ஒதியவுடன் மற்றும் குர்ஆன் வசனங்கள் ஓதியவுடன், மெளனமாக இருப்பது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஆரம்ப) தக்பீர் கூறி, குர்ஆன் வசனங்களை (கிராஅத்) ஓதுவதற்கு முன் சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். [புகாரி:744, முஸ்லிம்: 1049]
திர்மிதியின் ஹதீஸை அறிவித்த கத்தாதா பின் திஆமா(ரஹ்) அவர்கள்: "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (தொழுகையில்) குர் ஆன் வசனங்கள் ஓதி முடித்தவுடன் மூச்சு வாங்குவது நிற்கும்வரை சிறிது நேரம் மெளனமாக இருப்பதை விரும்புவார்கள்" என்றும் சொன்னார்கள். திர்மிதி:233] -
அதிகமாக தஸ்பீஹ் ஓதுவது:
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள், "கூட்டுத் தொழுகையில் (இமாமுக்குப்) பின்னால் தொழுபவர்கள் மூன்று தஸ்பீஹ்கள் ஓதுவதற்க்கு வசதியாக, இமாம் ஐந்து தஸ்பீஹ்கள் ஓதுவதை நான் விரும்முகிறேன்" என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ராஹவைஹி (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகிறார்கள். [திர்மிதி:242] -
தொழுகையின் நிற்றல், குனிதல், சிரம்பணிதல் நிறுத்தி, முழுமையாக சம கால அளவில் செய்வது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் முஹம்மத் (ஸல்) அவர்களது தொழுகையை ஊன்றிக் கவனித்தேன். தொழுகையில் அவர்களது நிற்றல் (கியாம்),குனிதல் (ருகூஉ), குனிந்து நிமிர்ந்த பின் நிலைகொள்ளல், அவர்களின் சிரவணக்கம் (சஜ்தா), இரு சிரவணக்கங்களுக்கிடையிலான அமர்வு, பிறகு சலாம் கொடுப்பதற்கும் எழுந்து செல்வதற்கும் இடையேயான இடைவெளி ஆகியவற்றின் கால அளவுகள் ஏறக்குறைய சம அளவில் அமைந்திருந்தன. [ஸஹீஹ் முஸ்லிம்:810] -
இரு சஜ்தாக்களுக்கு இடையே ஓத வேண்டிய பிரார்த்தனை:
இப்ன் அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் இரு சஜ்தாக்களுக்கு நடுவே, "அல்லாஹும்மஃக்பிர்லீ வர்ஹம்னீ, வஜ்புர்னீ, வஹ்தினீ, வர்ஸுக்னி" என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நிவாரணம் வழங்குவாயாக! என்னை நேர்வழியில் நடத்துவாயாக! எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!) [ திர்மிதி:262]
அபூதாவூதின்(850) அறிவிப்பில் வஜ்புர்னீ என்பதற்க்கு பதிலாக 'வ ஆஃபினி( என் உடல் நலம் காப்பாயாக! என்றும், இப்ன் மாஜாவின்(948) அறிவிப்பில் வஹ்தினீ என்பதற்க்குப் பதிலாக 'வர்ஃப அனீ(எனது நிலையை உயர்துவாயாக) என்றும் வந்துள்ளது. -
இரு சஜ்தாக்களுக்கு இடையே (இருப்பில் சிறிது நேரம்) நிலைகொள்வது.
ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள்/ ,,எஙகளுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்று நான் உஙகளுக்குத் தொழுவிப்பதில் எந்தக் குறைவும் வைக்க மாட்டேன்,, என்று கூறினார்கள். அனஸ் (ர) அவர்கள் (தொழுவித்தபோது) ஒன்னறச் செய்தார்கள். ஆனால் அதை நீஙகள் கடைப்பிடிப்பதைக் காணமுடியவில்லை. அனஸ் (ரலி) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி (நீண்ட நேரம் நிலை கொண்டு) நிற்பார்கள். எந்த அளவிற்கென்றால் ,அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள், என்று ஒருவர் கூற இடமுண்டு. இரு சஜ்தாக்களுக்கு இடையிலும் அவர்கள் (நீண்ட நேரம் நிலைகொண்டிருப்பார்கள்). எந்த அளவிற்கென்றால் ,அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள், என்று ஒருவர் கூற இடமுண்டு. [புகாரி:821, முஸ்லிம்:812]
No comments:
Post a Comment